மோடியைச் சந்தித்தார் நாயுடு... 4 அமைச்சர் பதவி...?
டெல்லி: நரேந்திர மோடி அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோடியுடன் இவர்களும் நாளை அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியில் இன்று மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் நாயுடு.
சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாயுடு மீண்டும் முதல்வராகிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்து நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
சீமாந்திராவில் தெலுங்குதேசம் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து பாஜக கூட்டணிக்குப் பலம் சேர்த்த நாயுடு கட்சியையும் கூட்டணியில் சேர்க்க மோடி முடிவு செய்துள்ளார். இதை நாயுடுவும் ஏற்றுள்ளார். நாயுடு, முன்னாள் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மோடியைச் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் நாயுடு. அப்போது தனது கட்சிக்கான அமைச்சர்கள் குறித்தும் அவர் மோடியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மோடியை மட்டுமல்லாமல் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களையும் இன்று நாயுடு சந்திக்கிறார்.
தெலுங்கு தேசத்திற்கு தற்போது ராஜ்யசபாவில் 6 எம்.பிக்கள் உள்ளனர். லோக்சபாவுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபா எம்.பிக்களில் 2 பேர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள். லோக்சபா எம்பிக்களில் ஒருவர் மட்டுமே தெலுங்கானாவைச் சேர்ந்தவர். மொத்தம் 22 எம்.பிக்களுடன் நாயுடு உள்ளார். அக்கட்சிக்கு 4 அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது. இந்த நான்கு பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நடக்கிறதாம்.
அதேசமயம், நான்கு அமைச்சர்களில் ஒருவரை தெலுங்கானாவைச் சேர்ந்தவராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள நாயுடு திட்டமிட்டுள்ளாராம். எதிர்காலத்தில் இது தெலுங்கானாவில் தனது கட்சி காலூன்றி வலுவடைய வசதியாக இருக்கும் என்பது அவரது எண்ணம்.