பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்! - அருண் ஜேட்லி
டெல்லி: வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத அனைத்துப் பணமும் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் இப்போது குறைந்து வருகின்றன. ஏடிஎம் மையங்களில் இப்போது கூட்டம் இல்லை.
நாட்டின் நிதிச் சூழலை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது. நிலைமையைப் பொருத்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கடந்த மூன்று மாதங்களில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளின் மூலம் வசூலான தொகை அதிகரித்துள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் வரி வசூல் 13 சதவீதம் குறைந்ததாக அந்த மாநில அமைச்சர் அமித் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரத்தில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வரி வசூல் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நல்ல ஆட்சி நிர்வாகம் இருக்கும் இடத்தில் வருவாயும் நன்றாக இருக்கும் என்பது புலனாகிறது," என்றார்.