பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்!
இஸ்லாமாபாத்: கடந்த சில காலமாகவே அமெரிக்கா என்ன கேட்டாலும் ஆமாம் சாமி என்ற ரேஞ்சுக்கே பாகிஸ்தான் பதிலளித்து வந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக அமெரிக்கா ஒன்று கேட்டு அதை பாகிஸ்தான் முடியாது என மறுத்துள்ளது. ஆபிரகாம் உடன்படிக்கை குறித்த அமெரிக்காவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இஸ்ரேலுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் எப்போதுமே ஆகாது. தனிப் பாலஸ்தீன நாடு கோரிக்கையை இஸ்ரேல் ஏற்க மறுப்பதால் வளைகுடா நாடுகள் எப்போதுமே இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் தான் இருக்கும். ஆனால், அமெரிக்கா இதை மாற்றப் பெரிய முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஆபிரகாம் உடன்படிக்கையை அனைத்து வளைகுடா நாடுகளையும் கையெழுத்து போட வைக்க அமெரிக்கா முயல்கிறது.

ஆபிரகாம் உடன்படிக்கை
இப்போது வரை அமீரகம், பஹ்ரைன், சூடான், மோராக்கோ ஆகிய நாடுகள் மட்டுமே ஆபிரகாம் உடன்படிக்கையைக் கையெழுத்திட்டுள்ளன. மற்ற நாடுகள், குறிப்பாக இஸ்லாமிய மற்றும் வளைகுடா நாடுகளை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைக்க டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். சமீபத்தில் டிரம்ப் இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் வெளிப்படையாகவே அழுத்தம் கொடுத்தார்.
அவர் தனது ட்ரூட் சோஷியல் பக்கத்தில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் ஆபிரகாம் உடன்படிக்கையில் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் எனக் கட்டாயக் கோரிக்கை விடுத்திருந்தார். இதில் பாகிஸ்தான் என்ன செய்யும் என்றே உலக நாடுகள் உற்று நோக்கின. ஏனென்றால், கடந்த சில காலமாகவே அமெரிக்காவும் பாகிஸ்தான் இணைந்தே செயல்பட்டு வந்தன.
பாகிஸ்தான்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தையைக் கூட பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்து வந்தது. அப்படியிருக்கும்போது டிரம்பின் இந்த திடீர் நிபந்தனை பாகிஸ்தானை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளியது. இத்தனை காலம் டிரம்ப் எது சொன்னாலும் ஆமாம் சாமி போட்டு வந்த பாகிஸ்தான், இப்போது முதல்முறையாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மறுப்பு
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப், "எங்களது அடிப்படை சித்தாந்தங்களுடன் முரண்படும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையாது. ஒரு நாள் கூட வார்த்தையைக் காப்பாற்றாத, நம்பகத்தன்மை இல்லாத அந்த மனிதர்களுடன் (இஸ்ரேல்) நாம் எப்படி ஒரே மேஜையில் அமர்ந்து பேச முடியும்? 1967ம் ஆண்டின் எல்லைகளின்படி, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவதை ஆதரிப்பதில் பாகிஸ்தான் எப்போதும் உறுதியாக இருக்கிறது. அதில் எவ்விதச் சமரசமும் கிடையாது.
எங்கள் 78 ஆண்டு கால வரலாற்றில் நாங்கள் இஸ்ரேலை ஒருபோதும் நாடாக அங்கீகரித்ததே இல்லை. இதனை உலகிற்கு நிரூபிக்க எங்கள் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் கொள்கையைக் கூட பாருங்கள்" என்றார். உலகிலேயே பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் மட்டும்தான் "இந்த பாஸ்போர்ட் இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும்" என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் யாரும் சட்டப்பூர்வமாக இஸ்ரேலுக்குப் பயணிக்க முடியாது. கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் அழுத்தத்தால் காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்த போது கூட, அது ஆபிரகாம் உடன்படிக்கையோடு எவ்விதத்திலும் தொடர்பற்றது என அதன் வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
வளைகுடா
மறுபுறம், வளைகுடா நாடுகளான சவூதி அரேபியாவும் கத்தாரும் கூட, பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இஸ்ரேலுடன் சமரசம் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், இந்த வளைகுடா நாடுகளின் நிதியுதவியையும், அமெரிக்காவின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களையும் நம்பியே காலத்தைத் தள்ளி வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரிடம் டிரம்ப் போனில் பேசிய பிறகும், பாகிஸ்தான் 'நோ' சொல்லியிருப்பது சர்வதேச அரங்கில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு அமெரிக்கா என்ன மாதிரி ரியாக்ட் செய்யும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்,












Click it and Unblock the Notifications