அன்று சந்திக்க கூட மறுத்த பிரதமர்!ஆனா இன்று டெல்லியையே முடிவு செய்யும் "பவர்" சந்திரபாபு நாயுடு தான்
விசாகப்பட்டினம்: தேசியளவில் கிங் மேக்கராக மாறியுள்ள சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக இப்போது டெல்லியே காத்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இவர் சந்தித்த அவமானங்கள் அதிகம்.. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 240 சீட்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.

இதனால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் ஆதரவு இப்போது பாஜகவுக்குத் தேவைப்படுகிறது. இந்த நம்பர் கேமை வைத்தே தேசிய அரசியல் சென்று கொண்டு இருக்கிறது.
கிங் மேக்கர்: சந்திரபாபு நாயுடுவின் இந்த எழுச்சி அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. கடந்த 1990களின் பிற்பகுதியில் மத்தியில் யார் பிரதமராக வர வேண்டும் என்பதை முடிவு செய்த கிங் மேக்கர்களில் முக்கியமானவர் சந்திரபாபு நாயுடு.. ஆனால், அதன் பிறகு மாநிலத்திலும் ஆட்சியை இழந்த இவர் சுமார் 10 ஆண்டுகள் பவரில் இல்லை. 2014இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் 2019இல் படுதோல்வி.. ஆனால், இப்போது தேசிய அரசியலைப் புரட்டிப் போடும் அளவுக்கு மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். தேசியளவில் அவர் முக்கிய தலைவராக மாறியுள்ளார்.
தலைகீழாக மாறியது: அரசியல் எந்தளவுக்கு தலைகீழாக மாறக்கூடியது என்பதற்கு நாம் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு இறுதியில் கைது செய்யப்பட்டார். சுமார் 2 மாதங்களுக்குப் பின்னரே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவர் ஆந்திராவில் ஒரு பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்க முடிவு செய்தார். அவரே பவன் கல்யாணிடம் முதலில் போய் கூட்டணியை இறுதி செய்தார்.
அடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். அப்போது என்டிஏ கூட்டணியில் அவர் இல்லை. இதனால் டெல்லி சென்று என்டிஏ கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்தார். இதற்காக எட்டு மாதங்கள் முன்பு டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து என்டிஏ கூட்டணியில் இணைய முடிவு செய்தார். அங்குப் பிரதமரைச் சந்திக்கப் பல முறை முயன்றார். ஆனால், கடைசி வரை மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு வரவே இல்லை.
என்ன நடந்தது: இதையடுத்து வேறு வழியின்றி அவர் ஆந்திரா திரும்பினார். 73 வயதான சந்திரபாபு நாயுடுவுக்கு அப்போது அதிகாரம் இல்லை.. சீட்களும் இல்லை.. இந்த அரசியல் பின்னடைவுகளே அவருக்கு அந்த அவமானத்தையும் புறக்கணிப்பையும் பெற்றுத் தந்தது. ஆந்திர திரும்பிய அவர், அதன் பிறகு தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டினார். இப்போது 8 மாதங்களில் அரசியல் களம் மொத்தமாக மாறிவிட்டது.
"அந்த ஒரு கைது.." ஆந்திர அரசியலை மொத்தமாக மாற்றியது.. சந்திரபாபு நாயுடுவின் எழுச்சி எப்படி நடந்தது?
சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஆந்திர சட்டசபை மற்றும் ஆந்திராவில் உள்ள லோக்சபாவில் அவர் மிகப் பெரியளவில் வென்றுள்ளார். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் இந்த சந்திரபாபு நாயுடு.. மீண்டும் 1990களை போலவே நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவராக மாறியிருக்கிறார்.
காலம் மாறும்: எந்த பிரதமர் அலுவலகம் இவருக்குக் கதவுகளைத் திறக்கவில்லையோ.. இப்போது அதே பிரதமர் அலுவலகம் இவருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. எந்த பிரதமர் இவரைச் சந்திக்க மறுத்தாரோ.. இப்போது அதே பிரதமர் இவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவர் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூட்டணியும் தூதுவிட்டுக் கொண்டு இருக்கிறது. காலம் எப்போதும் ஒரே நபரைத் தூக்கி உச்சாணியில் வைத்திருக்காது.. அதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது காலம்.












Click it and Unblock the Notifications