வரதட்சணையாக கார் கேட்ட மாப்பிள்ளை... போலீஸில் புகார் செய்து திருமணத்தை நிறுத்திய மணமகள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வரதட்சணையாக கார் தர வேண்டும் என மணமகன் கட்டாயப் படுத்தியதால், திருமணத்தை நிறுத்திய மணமகள், இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பதேஹ்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது வரதட்சணையாக மணமகன் வீட்டார் கேட்ட, டூ - வீலர் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அளிப்பதாக மணமகள் வீட்டார் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து வந்தது.

இந்நிலையில், மணமகளின் தந்தையை தன் வீட்டுக்கு அழைத்த மணமகன், தனக்கு, டூ - வீலர் வேண்டாம் என்றும், தன் பெற்றோர் விருப்பப்படி, கார் வாங்கித் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், தன்னிடம் கார் வாங்கித் தரும் அளவுக்கு பண வசதியில்லை' என மணமகளின் தந்தை கூறியுள்ளார். ஆனால், கார் வாங்கித் தந்தால் மட்டுமே திருமணம் என மாப்பிள்ளை வீட்டார் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார் மணமகளின் தந்தை. நடந்த சம்பவங்களை தந்தை மூலம் அறிந்து கொண்ட மணமகள், திருமணத்தை நிறுத்தினார். அதோடு மாப்பிள்ளை வீட்டார் மீது போலீஸ் ஸ்டேஷனிலும் அவர் வரதட்சணை புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications