பெங்களூரில் மடத்தில் உள்ள கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள உத்தராதி மடத்தில் உள்ள கிணற்றில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தால் நேராக சொர்க்கம் செல்லலாம் என்று நினைத்து தற்கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி(45). 1990ம் ஆண்டு அவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். கணவரை பிரிந்த சீதாலட்சுமி தனது சகோதரர் விஸ்வநாத்தின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நெருக்கமான அவரின் அக்கா கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பலியானார்.

அக்கா இறந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர் மனோநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தால் நேராக சொர்க்கம் செல்லலாம் என்று நினைத்து சகோதரருக்கு தெரியாமல் நைட்டியிலேயே பெங்களூரில் உள்ள உத்தராதி மடத்திற்கு வந்தார்.
வைகுண்ட ஏகாதசி அன்று மதியம் 3 மணி அளவில் பொது தொலைப்பேசியில் இருந்து உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்யப் போவதாகவும் இதை விஸ்வநாத்திடம் தெரிவிக்குமாறும் கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அந்த உறவினர் மீண்டும் அதே எண்ணை தொடர்பு கொண்டபோது தான் அது உத்தராதி மடத்திற்கு அருகில் உள்ள பொது தொலைப்பேசி என்று தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த விஸ்வநாத் பெங்களூருக்கு கிளம்பினார். இதற்கிடையே மடத்திற்கு சென்ற சீதாலட்சுமி கிணற்றில் குதிக்க சென்றார். அங்கு ஆட்கள் இருந்ததால் அங்கும் இங்குமாக நடந்து பின்னர் அவர்கள் சென்ற பிறகு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
போலீசார் வந்து சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூர் வந்த விஸ்வநாத் மருத்துவமனைக்கு சென்று தனது சகோதரியின் உடலை அடையாளம் காட்டினார்.












Click it and Unblock the Notifications