பெங்களூரில் அபார்ட்மென்ட்டின் 13வது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பலி: கொலையா?
பெங்களூர்: பெங்களூரில் இளம்பெண் ஒருவர் அபார்ட்மென்ட்டின் 13வது மாடியில் இருந்து விழுந்ததில் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்தவர் இஷா ஹன்டா(26). தானேவைச் சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட் சஞ்சய் ஹன்டா, ரஜனி சேத்தி ஹன்டாவின் ஒரே மகள். இஷா வேலைக்காக கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வந்துள்ளார்.

பெங்களூரில் உள்ள பழைய ஏர்போர்ட் ரோட்டில் இருக்கும் கோகனட் க்ரூவ் அபார்ட்மென்ட்டில் இரண்டு தோழிகளுடன் தங்கி வேலை பார்த்துள்ளார். முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் பின்னர் சிலருடன் சேர்ந்து ஸ்டேகிளாட் என்ற நிறுவனத்தை துவங்கினார்.
இந்நிலையில் இஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் உள்ள ஷோபா கிளாசிக் அபார்ட்மென்ட்டின் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலியானார். ஷோபா கிளாசிக் அபார்ட்மென்ட்டுக்கு அவர் எப்பொழுது வந்தார், எதற்காக வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை. அங்கு வசிக்கும் யாருக்கும் இஷாவை அடையாளம் தெரியவில்லை. அங்கு அவரின் நண்பர்களோ, சக ஊழியர்களோ வசிக்கவில்லை. அந்த அபார்ட்மென்ட்டுக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. அதனால் டாக்சி அல்லது ஆட்டோவில் தான் செல்ல வேண்டும்.
இஷா தற்கொலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அதே பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏதாவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி அவர் குதித்திருக்கலாம். ஆனால் அவர் ஏன் ஏராளமானோர் வசிக்கும் அபார்ட்மென்ட்டுக்கு வந்து தற்கொலை செய்ய வேண்டும் என்று பல கேள்விகள் எழுகின்றன.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இஷா பலியாகும் முன்பு தனது செல்போனில் உள்ள கால் ரெக்கார்டை அழித்துள்ளார். மேலும் மெசேஜ்களையும் அழித்துள்ளார்.
அவரது கைப்பையில் செல்போன், கஞ்சா, கயிறு, பாதி சாப்பிட்டு மீத உணவுடன் ஒரு டிபன் பாக்ஸ் ஆகியவை இருந்தன. இதற்கிடையே இஷாவின் காதலர் அனுபவ் சாஹூவுக்கும் அவருக்கும் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications