பைக்கில் செல்கையில் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலி: குழந்தை தப்பியது
புனே: மகாராஷ்டிராவில் கணவருடன் பைக்கில் செல்கையில் துப்பட்டா சக்கரத்தில் சிக்கி 25 வயது பெண் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டத்தில் உள்ள ஆலேவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். அவர் தனது பள்ளி காலத்து காதலியான பிரணாலி தனுவை(25) பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் மற்றும் மகள் ஸ்வரா(10 மாதம்) என இரண்டு குழந்தைகள். கடந்த சனிக்கிழமை மாலை ஆகாஷ் தனது மனைவி மகளுடன் வெளியே கிளம்பியுள்ளார்.
பைக்கை ஆகாஷ் ஓட்ட தனு, தனது மகளை மடியில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்துள்ளார். பைக்கில் செல்கையில் தனுவின் துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதில் அவரது கழுத்து நெறிக்கப்பட்டது. இதையடுத்து தனு தனது மகளுடன் கீழே விழுந்தார். இதை உணராமல் ஆகாஷ் பைக்கை ஓட்டினார். 15 மீட்டர் வரை சென்று பிறகே அவர் தனது மனைவி கீழே விழுந்ததை உணர்ந்து பைக்கை நிறுத்தினர்.
15 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டபோதும் தனு தனது மகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக அணைத்துக் கொண்டார். பைக் நின்ற பிறகே மகளை தரையில் விட்டார். உயிருக்கு போராடிய தனு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அண்மையில் ஆகாஷுக்கு வேலை போன பிறகு தனு ராக்கி செய்து விற்பனை செய்து வந்தார். ராக்கியை தனது சொந்த கிராமமான தண்டிக்கு சென்று விற்பனை செய்ய தான் அவர்கள் கிளம்பினர்.
இது குறித்து ஆகாஷ் கூறுகையில்,
என் மனைவி தற்போது உயிரோடு இல்லை. அவர் எங்கள் குட்டி தேவதை ஸ்வராவை காப்பாற்றியுள்ளார். என் மனைவி மற்றும் மகள் இருந்ததால் நான் பார்த்து வண்டியை ஓட்டியும் இப்படி நடந்துவிட்டது. வரும் செப்டம்பர் 26ம் தேதி தனுவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம் என்றார்.