முதல் திருமணத்தை மறைத்த கணவன்: 5 வயது மகளை கொன்று தாய் தற்கொலை
பெங்களூர்: கணவனுக்கு ஏற்கனவே திருமணமாகியதை தெரிந்து கொண்ட மனைவி தனது 5 வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூர் பன்னரகட்டா ரோடு, ஹுலிமாவு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி 2 ஆண் குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள ஸ்ரீநாத், அதை மறைத்து உஷா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இவருடனும் குடித்தனம் நடத்தினார். இத்தம்பதிக்கு சோனிகா என்ற 5 வயது பெண் குழந்தையிருந்தது.
இத்தனை ஆண்களுக்கு பிறகு கணவனுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதை உஷா எப்படியோ கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீநாத்திடம் கேட்டதற்கு அவர் ஒப்புக்கொண்டதுடன், உஷாவை அடித்து கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த உஷா நேற்று இரவு, கணவன் வீ்ட்டில் இல்லாத நேரத்தில் தனது மகளை சேலையால் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். நள்ளிரவு வீடு திரும்பியபோதுதான் மனைவியும், மகளும் இறந்து கிடந்தது ஸ்ரீநாத்துக்கு தெரியவந்தது.
உஷாவின் தந்தை நாகப்பா ஹுலிமாவு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கணவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.