உ.பி.யில் வரதட்சணைக் கொடுமை: உணவில் விஷம் வைத்து இளம்பெண் படுகொலை
முசாபர்நகர்: வரதட்சணைப் பிரச்சினை காரணமாக கணவரின் உறவினர்களால் இளம்பெண் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது அந்த வரிசையில் வரதட்சணைக் கொடுமையும் இணைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புவரா கிராமத்தை சேர்ந்த ஜெய்ல் சிங் என்பவரது மனைவி நேஹா (28). சர்க்கரை ஆலை ஒன்றில் எஞ்சினீயராக வேலை செய்து வருகிறார் ஜெய்ல் சிங்.
இந்நிலையில், நேற்று நேஹா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த நேஹாவின் குடும்பத்தார், வரதட்சணைப் பிரச்சினைக் காரணமாகவே அவர் கொலை செய்யப் பட்டுருக்கலாம் என கட்டோலி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நேஹாவின் சகோதரர் பங்கஜ் என்பவர் கூறுகையில், சமீபகாலமாக ஜெய்ல் சிங் குடும்பத்தார் தனது தங்கையை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்ததாகவும், தற்போது உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேஹாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.