டெல்லியில் கத்திமுனையில் பெண் பலாத்காரம்- கால்டாக்ஸி டிரைவர் கைது
டெல்லி: டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும் துவாரகா மோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரமேஷ் குமார் என்பவரின் வாடகைக் காரில் புறப்பட்டார். கார் டிரைவர் சற்று தொலைவு சென்றதும் வேறு ஒரு பயணியை ஏற்றியுள்ளார். அவரை ராஜபூரியில் இறக்கிவிட்ட பின்னர், காருக்கு எரிவாயு நிரப்ப வேண்டும் என்று ஒதுக்குப்புறமான இடத்திற்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த டிரைவர், காருக்குள் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். காருக்குள் மாட்டிக்கொண்டு கூக்குரலிட்ட அந்த பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டு, அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கவே போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர்.
போலீசாரைப் பார்த்த டிரைவர், அந்தப் பெண்ணுடன் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக சென்றுள்ளார். போலீசாரும் விடாமல் துரத்திச் சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் காரை மடக்கினர். தப்பி ஓட முயன்ற டிரைவரை கைது செய்தனர்.
தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு உபேர் கால் டாக்சியில் பயணம் செய்த 27 வயது இளம் பெண்ணை டாக்சி டிரைவரே கற்பழித்தார். அவரது புகாரின் பேரில், உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அந்த கார் டிரைவர் சிவகுமார் யாதவ் (வயது 32) கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுய் உள்ளார். கால் டாக்சி நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வாடகை காரில் டிரைவரால் 32 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்று விட்டதால் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.