ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி. கோரும் வழக்கு: அரசியல் சாசன பெஞ்சுக்கு மாறுகிறது..
டெல்லி: கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும் அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், பல்லாண்டு கால மத நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடுவது, அந்த நம்பிக்கைக்கு இழைக்கப்படும் அநீதி என்று முன்பு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே, மத நம்பிக்கையை நீதிமன்றம் உள்பட யாருமே கேள்வி கேட்க முடியாது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவில் என்பது பொதுவான ஆன்மிக தலம். அங்கு வரும் பெண்களுக்கு அனுமதி மறுக்க முடியாது.
அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு அனுமதி மறுப்பது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
எனவே இந்த வழக்கு 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்புவதற்கு உகந்தது என்று நாங்கள் நினைக்கக்கூடும். அப்படி மாற்றுவதாக இருந்தால் விரிவான உத்தரவை பிறப்பிப்போம். இந்த பிரச்சினை இதற்கு முன்பு எழவில்லை என்று கருதுகிறோம் என்றனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications