இந்தி பேசாதவர்கள் மீது இந்தி திணிப்பு இல்லை: மத்திய அரசு
இந்தி பேசாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தி மொழி தெரியாதவர்கள் அந்த மொழியை பயன்படுத்த தேவையில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகளில் மைல்கல்களில் இந்தி மொழியில் எழுதுவது, பாஸ்போர்ட்டில் இந்தி மொழி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் துளு மற்றும் கொடுவா ஆகிய மொழிகளை இந்திய அரசமைப்பின் 8-ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் பி.கே.ஹரிபிரசாத் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.
அதற்கு மத்திய இணை அமைச்சரும், அரசு மொழிகள் துறைகளின் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தி என்பது அரசு மொழி, மற்ற இந்திய மொழிகள் தேசிய மொழிகளாகும். மற்ற மொழிகள் மீது இந்தியை திணிப்பதா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்தி பயன்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டோம்.
இந்தியை ஊக்குவிக்கவோ, அதன் பயன்பாட்டை அதிகரிக்கவோ மத்திய அரசு சிறப்பு முயற்சிகள் எதையும் செய்யவில்லை. இந்தி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளதுதான். அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை.
மொழி என்பது மிகவும் உணர்ச்சிபூர்வமான விஷயமாகும். தவறான விளக்கத்தின் மூலம் தவறாக வழிநடத்திவிட்டால் நாட்டில் மிகவும் பெரிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றார் அவர்.