பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜி.கே.வாசன்
டெல்லி: பாஜகவுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாக பெரும் முரண்பாடுகள் உள்ளன. எனவே பாஜகவுடன் சேருவது அல்லது கூட்டணி என்பதற்கு வாய்ப்பே இல்லை என்று காங்கிரஸிலிருந்து வெளியேறியுள்ள ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
காங்கிரஸை விட்டு ஜி.கே.வாசன் நேற்று வெளியேறி விட்டார். புதிய அரசியல் பாதையில் செயல்படப் போவதாக கூறியுள்ளார். திருச்சியில் மாநாடு நடத்தி அதில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வாசன் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தான் விலகியது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
பேட்டியிலிருந்து....

பாஜகவுடன் சேர வாய்ப்பே இல்லை
பாஜகவில் இணைவது அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை. காரணம், நாங்கள், பாஜகவுடன் மிகவும் வேறுபட்டவர்கள். கொள்கை ரீதியாக முரண்படுபவர்கள். எனவே அதற்கான வாய்ப்பு இல்லை.

காங்கிரஸில் சூழல் சரியில்லை
14 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் இப்போது தமிழக காங்கிரஸில் இல்லை. இதை விட கட்சி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை.

தலைவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்தவர்கள் தங்களது கடமையில் தோற்று விட்டனர். கட்சியைப் பலப்படுத்தத் தவறி விட்டனர்.

திருப்தி இல்லை
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக பிரிவை நடத்திய விதம் திருப்தி தரவில்லை. தனது இலக்கை நிறைவேற்றுவதில் அது தமிழக காங்கிரஸுக்கு உதவியாக இல்லை.

இலக்கு, பாதை மாற வேண்டும்
எங்களது இலக்கை அடைய வேண்டுமானால் புதிய பாதை, புதிய பார்வை வேண்டும் என்பதால்தான் நாங்கள் எங்களது பாதையில் நடக்க ஆரம்பித்துள்ளோம்.

இது வெற்றிப் பாதை
எங்களுடைய பாதை வெற்றிப் பாதையாக அமையும். அதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்.

முன்னணிக் கட்சியாக மாறுவோம்
நாங்கள் தலைமை தாங்கும் கட்சியாக இருப்போம். முன்னணி பிராந்திய கட்சியாக இருப்போம். தமிழக மக்களுக்கு மாற்று அரசியல் சக்தியாக இருப்போம். பெருந்தலைவர் காமராஜரின் கனவுகளை நிறைவேற்றப் பாடுபடுவோம். இப்போதுதான் நாங்கள் சரியான திசையில் செல்ல ஆரம்பித்துள்ளோம்.

புதிய கலாச்சாரம் உருவாகும்
எங்களது புதிய கட்சியின் மூலம் தமிழகத்தில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக அது அமையும்.

ஜனநாயகம்- மதச்சார்பின்மை
ஜனநாயகம், மதச்சார்பின்மை, உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, வெளிப்படையாந தன்மை, திறமையான நிர்வாகம் ஆகியவையே எங்களது கட்சியின்முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

காமராஜர் - மூப்பனார் வழியில்
மறைந்த பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் வழியில் நாங்கள் எங்களது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். மக்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications