‘மச்லி’யைப் பாத்தீங்களா...‘- வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற அதிசய பெண் புலியைக் காணோமாம்!
ஜெய்ப்பூர்: உலகிலேயே அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்டது என்ற பெருமையைப் பெற்ற ஜெய்ப்பூர் பெண் புலி ‘மச்லி'யைக் கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என ரந்தம்போர் வனப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்போர் வனப்பூங்காவில் வசித்து வந்தது 17 வயதான "மச்லி" என்றழைக்கப்படும் பெண் புலி. இப்புலியைக் குறித்து அதிக ஆவணப்படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் மச்லியைக் காணவில்லை என வனப்பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மச்லி பேர்க்காரணம்....
முகத்தில் மீன் போன்ற தோற்றத்தோடு இருந்ததால் அப்புலிக்கு "மச்லி" எனப் பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆரோக்கியம்....
பொதுவாக குட்டிகளை ஈன்ற பின்னர் புலிகளின் வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்துவிடும் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால், அது நான்கு ஆண் புலிக்குட்டிகளையும், ஐந்து பெண் புலிக்குட்டிகளையும் ஈன்றெடுத்துள்ள மச்லி நீண்ட காலமாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .

வாழும் அதிசயம்....
உலகில் மிக அதிக காலம் வாழ்ந்து வருவதாக கருதப்படும் இப்புலி, வாழ்ந்து வரும் அதிசயம் என்று கூறப்படுகிறது. மச்லியைப் பற்றி பல்வேறு புத்தகங்களும், ஆவணப் படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

மானைக் கொன்ற மச்லி....
மச்லி அடிக்கடி காணாமல் போவது வாடிக்கை தான் என்றும், கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அது மான் ஒன்றை அடித்து கொன்றதை பார்த்ததாகவும் வனக்காப்பாளர் பலேந்து சிங் தெரிவித்துள்ளார்.

ரகசிய கேமராக்கள்....
ஆயினும் அப்புலியை கடந்த 9ந் தேதிக்குப் பிறகு பார்க்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மச்லியைக் கண்டறிவதற்கான முயற்சியில் ஐந்து ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

விரைவில் நல்ல சேதி...
மச்லி நிச்சயமாக நல்ல முறையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும், இன்னும் ஓரிரு நாளில் அது பற்றி நல்ல தகவல் வரும் என வட்டார வன சரக அதிகாரி ராகுல் பட்னாகர் தெரிவித்துள்ளார்.

முதலையைக் கொன்ற மச்லி....
ஒருமுறை 14 அடி நீளமுள்ள முதலை ஒன்றை சண்டையிட்டு கொன்ற மச்லிப் புலிக்கு ராஜஸ்தானின் பொருளாதார நிலையை உயர்த்தியதற்காக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications