அன்று 7 நாள்.. இன்று 3 நாள்..? முதல்வர் பதவியில் நீடிப்பாரா? ராசியில்லா ராஜாவா எடியூரப்பா?
கர்நாடக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இம்முறையாவது முழு பதவிக்காலத்தையும் அனுபவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இம்முறையாவது முழு பதவிக்காலத்தையும் அனுபவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான எடியூரப்பா கர்நாடக மாநில முதல்வராக நேற்று மூன்றாவது முறையாக பதவியேற்றார்.
பல்வேறு சிக்கல்கள் இழுபறிகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் 23 வது முதல்வராக எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா.

உச்சநீதிமன்றம் உத்தரவு
பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பா பெரும்பான்மையை நடத்த கர்நாடக சட்டசபையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இம்முறையாவது நீடிக்குமா?
வெறும் 104 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளது பாஜக. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பாஜக கேட்ட அவகாசத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 112 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இம்முறையாவது எடியூரப்பாவின் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில்
ஏற்கனவே 7 நாட்களில் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்துள்ளது. அப்போது எடியூரப்பா ஆட்சி கவிழ காரணமாக இருந்தவர் குமாரசாமி.கடந்த1999-ம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கூட்டணியில் விரிசல்
2006 பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8-ம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததார். இதனால் கூட்டணியில் விரிசல் விழுந்தது. பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது.

கவிழ்த்த குமாரசாமி
அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தது. 2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமராசாமியால் கவிழ்க்கப்பட்டது. 7 நாளில் இவரது ஆட்சி கவிழ்ந்தது.

3 ஆண்டுகள் 62 நாட்கள்
பின்னர் 2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். 3 ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். இரு நில ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தநிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

கேள்விக்குறியாகியுள்ளது
ஆக இதற்கு முன்பு இரண்டு முறையும் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தனது பதவிக்காலத்தை ஒரு முறை கூட முழுமையாக அனுபவிக்கவில்லை. இம்முறையும் அது கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications