உத்தரப் பிரதேசத்தில் 1.30 கோடி குடும்பங்களுக்கு குடிநீர்! கனவு நனவாகியுள்ளதாக யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சுமார் 1.30 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் கனவு நனவாகியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக இதுவரை யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. ஆனால் தற்போது யோகி 6 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை மதிப்பாய்வு செய்து, அதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை தீர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஜல் ஜீவன் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதில் பேசிய அவர், "இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்னர் 5.16 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே குழாயில் இருந்து சுத்தமான குடிநீர் கிடைத்தது. தொடர் முயற்சியால், இன்று 1.30 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கனவு நனவாகியுள்ளது.

2022-23 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 59.38 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கும் படிப்படியாக மற்றும் காலக்கெடுவுக்குள் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் 22,714 குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மே மாதம் 12.96 லட்சமாக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 43,000 குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது 50,000ஆக உயர்த்தப்பட வேண்டும்.
"உத்திரப் பிரதேசம் பெரிய மாநிலம், அதனால் நமது பொறுப்பும் பெரியது. ஜல் ஜீவன் மிஷனுக்கு நிதிப் பற்றாக்குறை இல்லை. தேவைக்கேற்ப மனிதவளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற பிளம்பர் நியமிக்கப்பட வேண்டும். இதில் தேவையற்ற தாமதம் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பண்டேல்கண்ட் மற்றும் விந்தியா பகுதிகளுக்கு தூய குடிநீர் ஒரு கனவாக இருக்கிறது. இதனை பாஜக சாதித்து காட்டியிருக்கிறது.
ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர், ஜலான், பண்டா, சித்ரகூட், மிர்சாபூர், சோன்பத்ரா மற்றும் விந்தியா-பண்டேல்கண்ட் பகுதி முழுவதிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கும் இலக்கை அடுத்த இரண்டு மாதங்களில் எட்டிவிடுவோம். மேலும், மாநிலத்தில் உள்ள 98,445 கிராமங்களில் 91,919 கிராமங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து கிராமங்களிலும் பணிகள் முடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications