தொடரும் ஒருதலைக் காதல் வெறி.. கோவை பெண் கொலை.. கொன்றவர் கேரளாவில் தற்கொலை முயற்சி!
பாலக்காடு: ஒரு தலைக் காதலால் கோவையைச் சேர்ந்த இளம்பெண் தன்யாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கேரளாவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர் தென்னம்பாளையம் சாலை டெய்லர் சோமுவின் மகள் தன்யா. இவர் பொங்கலூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தன்யாவை அவரது பக்கத்து வீட்டில் தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்த சகீர் என்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் சகீரின் காதலை தன்யா ஏற்க மறுத்துவிட்டார்

திருமண முயற்சி
ஆனாலும் சகீர் விடாப்பிடியாக தன்யாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இதனால் சகீரை தன்யாவின் பெற்றோரும் கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.

கத்தியால் குத்தி கொலை
இதை அறிந்த சகீர், நேற்று தன்யா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இதனிடையே சகீரை போலீசார் தேடி வந்தனர்.

கேரளாவில் தற்கொலை முயற்சி
அப்போதுதான் கேரளாவுக்கு தப்பி ஓடிய சகீர் பாலக்காட்டில் உள்ள தமது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் சகீரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தொடரும் விபரீதம்
இதைத் தொடர்ந்து பாலக்காடு விரைந்த கோவை போலீசார் சகீரை கைது செய்ய உள்ளனர். சென்னை சுவாதி, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா வரிசையில் ஒருதலைக் காதலால் கோவை தன்யாவும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications