உங்க டீயில் நிறம், மணத்தோட கொஞ்சம் விஷமும் இருக்கு.. எஸ், பாஸ்!
டெல்லி: இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலையில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் கலப்படம் உள்ளதாக கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
நம்மவர்களில் பலருக்கு விடியல் என்பதே டீ கப் முகத்தில் தான். டீயைக் குடித்து புத்துணர்ச்சியாக நாளைத் துவக்குகிறோம் என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலையிலேயே நமது எதிர்காலக் கருமாதிக்கு நாள் குறித்து விட்டுத்தான் வேலைகளை ஆரம்பிக்கிறோம் போல.. காரணம், அந்த டீயில் பூச்சி மருந்துகள் கலப்படமாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வு...
கடந்தாண்டு மே மாதம் முதல் இந்தாண்டு ஜூன் மாதத்திற்கு இடைப்பட்டக் காலத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்த தேயிலை மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பூச்சி மருந்து கலப்படம்...
அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு தேயிலை நிறுவனங்களின் 49 வகை டீ பாக்கெட்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவைகளில் 34 பாக்கெட்டுக்களில் இருந்த டீத்தூளில் பூச்சி மருந்துகளின் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது.
அறிக்கை...
இவ்வாறு பூச்சி மருந்து கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிக்கைகளை சம்பந்தப்பட்ட தேயிலை நிறுவனங்களுக்கு கிரீன்பீஸ் அமைப்பு அனுப்பியுள்ளதாம்.
ஏற்றுமதி...
கலப்படம் செய்யப்பட்ட இந்தக் குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தேயிலைகள் இந்தியாவில் மட்டுமின்றி ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுப்பு...
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இந்திய தேயிலை வாரியம் மறுத்துள்ளது. இந்தியத் தேயிலைகள் தரமானவை என்பதில் சந்தேகமே இல்லை என அது தெரிவித்துள்ளது.
இவை தான் அவை....
சோதனைக்குட்படுத்தப்பட்ட டீத்தூள் நிறுவனங்கள் இவைதான்- ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா குளோபல் பீவரேஜஸ், வாக் பக்ரி, குட்ரிக் டீ, டிவின்னிங்ஸ், கோல்டன் டிப்ஸ், கோ சா, கிர்னார்.
பேசாம இனிமேல் டீயை விட்டு காபிக்கு மாறிடலாமா.. ஒரு வேளை அதில் கரப்பான் பூச்சியை மிக்ஸ் பண்ணிக் கொடுத்திட்டா... வம்பே வேணாம். கம்பங் கூழ்தான் பெஸ்ட்!