மரக்கிளை விழுந்து பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க சென்ற வாலிபர் சாவு
பெங்களூர்: வாக்களிக்க சென்ற 22 வயது வாலிபர் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பரிதாபமாக பலியான சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் மாநகராட்சியின் 197 (மொத்தம் 198 வார்டுகள்) வார்டுகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது.

மழை காரணமாக காலையில் மந்த கதியில் வாக்குப்பதிவு இருந்தது. ஆனால், அந்த நிலையிலும் ஓட்டுபோட ஒரு வாலிபர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பெங்களூரின் மையப்பகுதியான சிவாஜிநகரின் வார்டு எண் 92க்கான வாக்குச்சாவடியில் வாக்களிக்க இன்று காலை 9 மணியளவில் பையாஸ் என்ற 22 வாலிபர் சென்றார். அவர் வாக்குச்சாவடி அருகே சென்றபோது, மரத்தில் இருந்து முறிந்து விழுந்த மரக்கிளை அவரது தலையில் பாய்ந்தது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை, அருகில் இருந்தோர் பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தலைக்குள் மரக்கட்டை புகுந்துவிட்டதால், பையாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை தொடங்கி விடியவிடிய பெய்த மழை காரணமாக மரக்கிளை உடைபட்டு இருந்துள்ளது. அதை வெட்டி வீழ்த்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காட்டியது ஒரு வாலிபரின் உயிரை பறித்துள்ளது.












Click it and Unblock the Notifications