காதலியை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
டெல்லி: தன் காதலியுடன் நெருக்கமாக இருந்ததை, அவருக்குத் தெரியாமல் படம் பிடித்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் தனிமையில் இருந்த சமயங்களில், அப்பெண்ணிற்குத் தெரியாமல் தனது செல்போனில் அக்காட்சிகளைப் படம் பிடித்து வந்துள்ளார். அதைக் கொண்டு ஆபாசப் படக்காட்சி ஒன்றையும் அவர் தயாரித்துள்ளார்.
இந்த விஷயம் அப்பெண்ணிற்கு தெரிய வந்ததையடுத்து, டெல்லி போலீசில் கடந்தாண்டு அவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது நண்பர், தன்னை அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை ரகசியமாக படம் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ‘ஒருவரின் சம்மதத்தோடு உறவு கொண்டாலும் கூட, அவரின் சம்மதம் இல்லாமல் நெருக்கமான தருணங்களைப் படம் பிடிப்பது குற்றம்' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ‘ஒருவரின் தனிநபர் உரிமைகளை மற்றவர்கள் எப்போதும் மதிக்க வேண்டும். இந்த ஆபாசப் படக்காட்சி வெளியிடப்பட்டிருந்தால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை சீரழிந்திருக்கும். எனவே, இது ஒரு கடுமையான குற்றம் ஆகும்.
ஆனாலும், இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடே இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதால், இது பாலியல் பலாத்காரம் ஆகாது' என அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications