உ.பி.யில் பயங்கரம்: சிகரெட் தர மறுத்த வாலிபர் சுட்டுக் கொலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சிகரெட் தர மறுத்த வாலிபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் சியானி கேட் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்(25). கடந்த 1ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு பேர் காசியாபாத் சென்று கொண்டிருந்தனர். வழியில் நிர்மலை பார்த்த அவர்கள் தங்களுக்கு சிகரெட் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் நிர்மல் சிகரெட் தர மறுத்துவிட்டார்.
இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து பிரதீப் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து நிர்மலை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்பகுதி மக்கள் நிர்மலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப் மற்றும் ராகுலை கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசார் அந்த இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு சிகரெட்டுக்காக வாலிபர் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications