ஜேஎன்யூ போராட்டத்தில் பாக். ஜிந்தாபாத் கோஷம் சேர்ப்புக்கு எதிர்ப்பு- ஜீ நியூஸ் புரொடியூசர் ராஜினாமா
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ) மாணவர்களின் போராட்ட காட்சியை ஒளிபரப்பும் போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை வேண்டுமென்றே சேர்த்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜீ நியூஸ் ஹிந்தி டிவி சேனலின் புரொடியூசர் தீபக் ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குற்றச்சாட்டு. இதனால் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அந்த போராட்டத்தின் போது மாணவர்கள், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. அந்த போராட்டத்தின் வீடியோ காட்சிகளில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை வேண்டுமென்றே சேர்த்து ஜீ நியூஸ் ஹிந்தி டிவி சேனல் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதும் அம்பலமாகி உள்ளது.

தற்போது ஜீ நியூஸ் ஹிந்தி டிவி சேனலில், மாணவர்களின் போராட்ட காட்சிகளுடன் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் புரொடியூசர் தீபக் என்பவர் பணியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீபக், பத்திரிகையாளர்களாகிய நாம் மற்றவர்களை கேள்வி கேட்கிறோம்.. ஆனால் ஒருபோதும் நம்மை நாம் கேள்விக்குள்ளாக்குவதில்லை.
மற்றவர்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக கூறுகிற நாம், நமக்கு பொறுப்பு இருப்பதை உணர்வதில்லை. ஜனநாயகத்தின் 4வது தூணாக நம்மை நாம் அழைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய நிறுவனங்கள், நமது சிந்தனைகள் உண்மையில் ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் வகையிலா இருக்கிறது? ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் ஊடகங்களால்தான் தேசத்துரோகியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இது மோசமான போக்கு.
இத்தகைய கோஷங்களை சேர்த்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது பணியை ராஜினாமா செய்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தீபக் அளித்த பேட்டியில், கடந்த பிப்ரவரி 10-ந் தேதியன்று எனக்கு காலை ஷிப்ட். அப்போதுதான் இந்த வீடியோ காட்சி கிடைத்தது. இதுதான் இன்றைய முக்கிய செய்தி என செய்தி ஆசிரியர்கள் கூறினர்.
அந்த வீடியோ காட்சியை நான் பார்த்தபோது, பாரதிய கோர்ட் ஜிந்தாபாத் என்ற முழக்கம்தான் இடம்பெற்றிருந்தது. அதில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் செய்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோர்தான் அதில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் முழக்கத்தை சேர்த்து ஒளிபரப்பினர் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து அதன் செய்தி ஆசிரியர் சுதிர் சவுத்ரி கூறுகையில், தீபக் ராஜினாமா விவகாரம் எங்கள் நிறுவனத்தின் உள் விவகாரம் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஒரிஜனல் வீடியோ காட்சியை தாக்கல் செய்யுமாறு ஜீ நியூஸ் ஹிந்தி டிவி சேனலுக்கு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications