இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்களர் கைது- சிறையில் அடைப்பு
காரைக்கால்: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்கள மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருவது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையினரோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என குற்றம்சாட்டி 800க்கும் அதிகமானோரை படுகொலை செய்துள்ளனர். இந்த அட்டூழியம் இப்போதும் தொடருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களை சிறையில் அடைப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடருகிறது.
இந்த நிலையில் காரைக்கால் இந்திய கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக இந்திய எல்லைப் பகுதியில் விசைபடகு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த படகில் வந்த 6பேரிடமும் கடலோர காவற்படையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 6 பேரும் இலங்கை திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில் கடந்த 21-ந் தேதி திருகோணமலையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் 6 பேரும் சிங்களர் என்பது தெரியவந்துள்ளது.