ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்... உடல் சிதறி 12 பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் மரணமடைந்ததாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் அறிவித்ததையடுத்து காபூலில் கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளின தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

அந்த வகையில், மேக்ரோரேயானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தனியார் ஷினோஜதா மருத்துவமனை அருகே நேற்று நேட்டோ படையினர் ஒரு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களைக் குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் காரில் வந்து தாக்குதல் நடத்தினான். கார் வெடித்துச் சிதறியதில், 3 வெளிநாட்டவர்கள் உள்பட 12 பேர் பலியானதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இது தலிபான்களின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள இ-மெயில் செய்தியில் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை தங்கள் அமைப்பு நிகழ்த்தவில்லை என்று மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications