மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மாத கர்ப்பிணி உள்பட 14 பேர் பலி, 12 பேர் மாயம்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள ஜோஹார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர், 12 பேர் மாயமாகியுள்ளனர்.
மலேசியாவின் கடற்கரை மாநிலமான ஜோஹார் இந்தோனேசியாவின் கடல்வழி எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் இந்தோனேசியர்கள் பலர் கடல்வழியாக வந்து மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள்.
மலேசியாவில் சுமார் 20 லட்சம் இந்தோனேசியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தோனேசியர்களில் 62 பேர் கடந்த சனிக்கிழமை ஒரு படகில் தங்கள் நாட்டிற்கு கிளம்பினர்.

அப்போது கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 பெண்கள், 26 ஆண்களை மீட்டனர்.
மேலும் 14 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட பிரேதங்களில் 7 மாத கர்ப்பிணியும் அடக்கம். இந்த விபத்தில் படகில் இருந்த 12 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜோஹார் கடலில் படகு கவிழ்ந்ததில் 18 இந்தோனேசியர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications