ஈராக் போர்க்களத்தில் இருந்து 16 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு!
பாக்தாத்: ஈராக் போர்க்களத்தில் இருந்து 16 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய இந்தியர்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்கள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வசம் வீழ்ந்துவிட்டன.

தலைநகர் பாக்தாத்துக்கான இறுதி யுத்தம் எந்த நேரத்திலும் நடைபெறலாம். ஈராக் போர்க்களமாகிவிட்டதால் அங்கு பணியாற்றி வரும் 18 ஆயிரம் இந்தியர்களின் நிலைமை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகரைக் கைப்பற்றிய போது 40 இந்தியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்துவிட்டார்.
மற்றொரு நகரமான திக்ரித்தில் 46 தமிழக, கேரள செவிலியர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த நிலையில் இந்தியர்களை மீட்பதற்கான சிறப்பு தூதுவராக சுரேஷ் ரெட்டி ஈராக் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஆலோசனை- 16 பேர் மீட்பு
இதனிடையே ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் ஆய்வு செய்தார். இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈராக்கின் மொசூல் நகரில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் ஒருவர் தப்பி பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வந்துள்ளார். திக்ரீத் நகரில் உள்ள 46 செவிலியர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
ஈராக்கில் போர்க்களப் பகுதியில் மொத்தம் 120 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் பைஜி, அல் தபார் ஆகிய நகரங்களில் இருந்தும் மொத்தம் 16 பேர் நேற்று மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஈராக்கில் உள்ள இந்திய தூதரக அமைப்புகள் அனைத்தும் தொடர்பில் உள்ளன. அவை உஷாராக இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டும் உள்ளன. ஈராக்கைச் சுற்றியுள்ள நாடுகளின் இந்திய தூதரகங்களையும் தங்கள் நாட்டு வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications