துனிசியா நாடாளுமன்றம் அருகே திடீர் துப்பாக்கிச் சூடு: 17 வெளிநாட்டவர் உட்பட 19 பேர் பலி!
டுனிஸ்: துனிசியா நாடாளுமன்றம் அருகே உள்ள மியூசியத்துக்குள் நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலியாகினர். இத்தாக்குதலை நடத்திய 2 ஆயுததாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனியாவின் நாடாளுமன்றம் அருகே உள்ளது புகழ்பெற்ற பார்டோ மியூசியம். இன்று பகலில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் திடீரென மியூசியத்துக்குள் நுழைந்தனர்.

பின்னர் மியூசியத்தைப் பார்வையிட பேருந்தில் வந்த வெளிநாட்டவர் மீது கண்மூடித்தனமாக அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் மேலும் 10 வெளிநாட்டவரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர் ஆயுததாரிகள்.
பிணைக் கைதிகளை மீட்க ராணுவம் ஆயுததாரிகள் மீது துனிசியா ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிணைக் கைதிகள் தம் வசம் இருந்த 10 வெளிநாட்டவரையும் கொன்றுவிட்டனர். ஒருவழியாக ஆயுததாரிகளை துனியா ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
ஆயுததாரிகளின் தாக்குதலில் மொத்தம் 19 பேர் பலியாகினர். இதில் 17 பேர் வெளிநாட்டவர். 2 பேர் துனிசியா நாட்டவர்.
அரபு வசந்தம் என்ற ஆட்சி மாற்றப் புரட்சியை எதிர்கொண்டிருந்தது துனிசியா. அதே நேரத்தில் சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாமிய அரசை நிறுவியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் துனிசியா நாட்டைச் சேர்ந்தோர் பெருமளவில் இணைந்துள்ளனர்.
அண்மையில் கூட, துனிசியா மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்று சமூக வலைதளங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த ஆயுததாரிகளும் ஐ.எஸ். இயக்கத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் துனிசியா நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் இந்த ஆயுத கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, இந்த சம்பவம் துனிசியாவில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications