ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி 2,411 பேர் பலி: சவுதி அரசு அறிவித்ததை விட 3 மடங்கு அதிகம்
ரியாத்: ஹஜ் புனித பயணத்தின்போது மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,411 என்றும், இது சவுதி அரேபிய அரசு அறிவித்த எண்களை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவின் மெக்கா நகர் அருகே உள்ள மினாவில் ஹஜ் யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் பங்கேற்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் பலியானதாக சம்பவம் நடந்த 2 நாட்கள் கழித்து சவுதி அரசு அறிவித்தது. அதன் பிறகு பலி எண்ணிக்கை பற்றி சவுதி அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த அசோசியேட்டட் செய்தி நிறுவனம் புதிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது மினா நகரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை 2 ஆயிரத்து 411 என்றும், இந்த எண்ணிக்கை சவுதி அரசு அறிவித்ததை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அது தெரிவித்துள்ளது.
மாநில ஊடக அறிக்கைகள் மற்றும் 36 நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் அசோசியேட்டட் செய்தி நிறுவனம் இந்த புதிய எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களில் அதிகமானோர் (464 பேர்) ஈரானைச் சேர்ந்தவர்கள். முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அதிகமாக 1, 426 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications