இசையை ரசித்துக் கொண்டிருந்த தந்தை... வாஷிங்மெஷினில் விழுந்து பலியான இரு குழந்தைகள்
பெய்ஜிங்: சீனாவில், வாஷிங்மிஷினில் தவறி விழுந்த இரு குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாகப் பலியானார்கள்.
சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த குயோஷி நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களது தாய் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்பாரா விதமாக வாஷிங்மிஷினிற்குள் விழுந்து விட்டன. சமையல் அறையில் இருந்த அவர்களது தாய் இதனைக் கவனிக்கவில்லை. இதனால், வாஷிங்மிஷினிற்குள் விழுந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாகப் பலியானார்கள்.
பலியான குழந்தைகளின் வயது முறையே 3 மற்றும் 2 எனச் சொல்லப்படுகிறது. இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் இந்தப் பரிதாபச் சம்பவம் நடந்த போது குழந்தைகளின் தந்தை வீட்டில் தான் இருந்துள்ளார். இசையை ரசித்தபடி இருந்த அவரின் காதுகளுக்கு குழந்தைகளின் அபயக் குரல் கேட்கவில்லையாம்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.