ஏர் ஏசியா விமான விபத்து: 2 விமான பாகங்கள்- 46 உடல்கள் மீட்பு
ஜகார்தா: கடலுக்குள் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் 2 முக்கிய பாகங்கள் மற்றும் 46 பயணிகள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஏர் ஏசியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ரகத்தை சேர்ந்த 8501 விமானம், இந்தோனேஷியாவின் சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி கடந்த 28-ந் தேதி சென்று கொண்டிருந்தது. 155 பயணிகள் 7 விமான ஊழியர்களுடன் இந்த விமானம் நடுவானில் மாயமானது.

இந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளின் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது விமானம் விபத்துகுள்ளாகி ஜாவா கடல் பகுதியில் விழுந்தது தெரிய வந்தது. ஜாவா கடல் பகுதியில் கரிமட்டா ஜலசந்திக்கு அருகில் விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 65 கப்பலகள், 14 விமானங்கள்,19 ஹெலிகாபடர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.
இன்று 7 வது நாள் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது 2 மிகப் பெரிய பொருட்கள் சிக்கின. இவை இரண்டும் ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 46 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய உடல்கள் விமானத்தின் உள்பகுதியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications