உச்சநீதிமன்றத்தில் 2 ஈரான் நீதிபதிகள் சுட்டுக்கொலை.. குற்றவாளியும் தன்னை தானே சுட்டு தற்கொலை
தெஹ்ரான்: ஈரானில் உளவு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கி வரும் 2 உச்சநீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற வளாகத்திலேயே வைத்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அதோடு அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த உச்சநீதிமன்றத்தில் முகமது மொஹிசா மற்றும் அலி ரசானி ஆகியோர் நீதிபதிகளாக இருந்தனர்.

இவர்கள் 2 பேரும் ஈரான் பாதுகாப்பு சார்ந்த வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கி வந்தனர். அதாவது தீவிரவாதம் மற்றும் உளவு தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தான் நேற்று உச்சநீதிமன்றத்துக்கு 2 நீதிபதிகள் வந்திருந்தனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள ஓய்வறையில் அவர்கள் அமர்ந்து இருந்தனர். இந்த சமயத்தில் உள்ளே புகுந்த நபர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து இருநீதிபதிகளையும் சுட்டார். இதில் நீதிபதிகள் முகமது மொஹிசா, அலி ரசானி ஆகியோர் குண்டுகாயமடைந்து இறந்தனர். ஒரு நீதிபதியின் பாதுகாவலரும் காயமடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்து மர்மநபர் வேகமாக வெளியே ஓடினார். அவரை பிடிக்க முயன்ற நிலையில் அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதோடு தற்போது சுட்டு கொல்லப்பட்ட நீதிபதிகள் முகமது மொஹிசா மற்றும் அலி ரசானி ஆகியோர் தீவிர அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்கள். இவர்கள் பலருக்கும் கடும் தண்டனைகளை வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு உள்ளனர்.
இருப்பினும் தற்போது 2 நீதிபதிகள் எதற்காக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தின் பின்ணனியில் யார் உள்ளனர்? என்பது இன்னும் தெரியவில்லை. இதுபற்றி ஈரான் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications