கொடூரம்! உக்ரைன் பள்ளியை குறி வைத்து ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதல்! 21 பேர் பலி.. பலர் படுகாயம்!
கீவ்: உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், ரஷ்யா ராணுவம் உக்ரைனில் உள்ள பள்ளி வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. முதலில் சில நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.
இருப்பினும், ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து துணிச்சலாக உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால், உக்ரைன் நாட்டில் பல நகரங்களில் போர் தொடர்ந்தே வருகிறது.

உக்ரைன் போர்
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளிலும் இதுவரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ச்சியாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக. கடந்த மார்ச் 10ஆம் தேதி, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

பள்ளியில் தாக்குதல்
கிழக்கு உக்ரைனில் இருக்கும் நகரத்தில் ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் 25 பேர் காயமடைந்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கார்கிவ் நகருக்கு வெளியே உள்ள மெரேஃபா என்ற பகுதியில் இருந்த பள்ளி மற்றும் கலாசார மையத்தின் மீது வியாழன் அதிகாலை ரஷ்யா இந்த ஷெல் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் காயமடைந்த 25 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்பு
இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் பள்ளிக் கட்டிடம் தீ பற்றி எரிந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதன் ஜன்னல்கள் நொறுங்கிக் கிடக்கின்றன. இந்தத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்களையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யா
உக்ரைனில் பொதுமக்கள் இருக்கும் கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மருத்துள்ள ரஷ்யா, அங்குள்ள ராணுவ அமைப்புகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்திருந்தது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று மரியுபோல் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனையைத் தாக்கியதில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications