போகோ ஹராம் தீவிரவாத அமைப்பில் பெண்கள் - 3 பெண் தீவிரவாதிகள் கைது
மைதுகுரி: நைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 3 பெண் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை அளித்து வருகின்றது. வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் இவர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரலில் இவர்கள் பள்ளி ஒன்றுக்குள் நுழைந்து கிட்டதட்ட 200 மாணவிகளைக் கடத்திச் சென்று விட்டனர்.. அரசும், மற்ற நாடுகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போதிலும் இன்னும் அவர்களை மீட்க இயலவில்லை.
இந்நிலையில் ஆண்கள் மட்டுமே தீவிரவாதிகளாக உள்ளனர் என்ற கருத்தினை பொய்யாக்கும் வகையில் அங்கு பெண்கள் பிரிவும் இயங்கி வரும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
அப்படிப்பட்ட தீவிரவாதிகளான 3 பெண்களை நைஜீரிய போலீசார் கைது செய்துள்ளனர். மதகாலி நகருக்கு சென்று கொண்டிருந்த போது இம்மூன்று பெண் தீவிரவாதிகளும் பிடிபட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.