வங்களதேச வலைத்தள எழுத்தாளர்கள் கொலை - திட்டம் போட்டுத் தந்தவர் உட்பட 3 தீவிரவாதிகள் கைது
டாக்கா: வங்காளதேசத்தில் வலைதள எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூளையாக இருந்து திட்டம் தீட்டித்தந்தவன் உள்பட 3 தீவிரவாதிகளை அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து, வலைதளங்களில் மதச்சார்பற்றக் கருத்துகளை பதிவு செய்து வந்த நிலாய் நீல் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொன்றது.
ஏற்கனவே, வங்காளதேசத்தில் அனந்த பிஜோய் தாஸ், அவிஜித் ராய், வாசிக்கர் ரஹ்மான் ஆகிய மதசார்பற்ற வலைதளக் கட்டுரையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், நான்காவதாக நிலாய் நீல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலைகள் தொடர்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கான அல்-கொய்தா பிரிவின் வங்கதேச அங்கமான அன்ஸார்-அல்-இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சில தீவிரவாதிகளை அதிரடிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தன்மோன்டி மற்றும் நில்கெட் பகுதிகளில் பதுங்கி இருந்த மேற்படி இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை நேற்றிரவு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவனான தவ்ஹீதுல் இஸ்லாம் என்பவன், வலைதள எழுத்தாளர்களான அவிஜித் ராய் மற்றும் அனந்த பிஜாய் தாஸ் ஆகியோரின் படுகொலைக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டித் தந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications