இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து.. 4 லட்சம் காசா மக்களை காணவில்லை! ஷாக் ரிப்போர்ட்
காசா: காசா மீது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் மக்களை காணவில்லை என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
the new arab செய்தி ஊடகம் இது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "ஹார்வர்ட் டேட்டாவர்ஸ் ஒரு புதிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3,77,000 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இஸ்ரேலிய பேராசிரியர் 'யாகோவ் கார்ப்' இந்த அறிக்கையை எழுதியுள்ளார். பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உண்மையான எண்ணிக்கை 61,000 ஆக இருக்கும் என்றும் கார்ப் கூறியுள்ளார். போருக்கு முன்னர் காசாவில் 22 லட்சம் பேர் வசித்து வந்தனர். தற்போது 19 லட்சம் பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
சிலர் இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது காணாமல் போகலாம் என்றாலும், இந்த இடைவெளியின் அளவு, கணிசமான எண்ணிக்கையிலானோர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்களை இட்டுச் சென்றுள்ளது" என கார்ப் தெரிவித்திருப்பதாக the new arab செய்தியை வெளியிட்டிருக்கிறது.
போர் காரணமாக உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் மனிதாபிமான அமைப்புகள் இந்த உதவியை வழங்க முன்வந்தாலும், அதை பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. உதவி பெற துடிக்கும் சாமானிய மக்களின் கண்ணியத்தையும், உயிரையும் பாதுகாக்க சர்வதேச நாடுகள் தவறிவிட்டது என்றும் கார்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த மே மாத இறுதியில் இருந்து இன்று வரை, மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 450 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது. இந்நிலையில் கார்ப் அறிக்கை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஆனால் மறுபுறம் France 24 போன்ற செய்தி ஊடகங்கள் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளன. இது போலியான அறிக்கை என்றும் கூறியுள்ளன. "சமூக ஊடகங்களில் பரவும் இந்தத் தகவல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படவில்லை. மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது" என்று France 24 கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications