விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சாப்பிட்ட 5 பேர் பலி
அபுஜா: நைஜீரியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நார்த் கிராஸ் ரிவர் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தனர். ஆனால், அந்த செல்லநாய் பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டைகளை திருட்டுத்தனமாக தின்று வந்துள்ளது.
இதனால் தனது நாயினைக் கொல்ல முடிவு செய்தார் அதன் உரிமையாளர். அதன்படி, விஷம் கலந்த முட்டையை நாயின் பார்வையில் படும்படி வைத்தார். வழக்கம்போல, அந்த முட்டைகளையும் சாப்பிட்ட நாயின் உடல்நிலைப் பாதித்தது. உயிருக்குப் போராடிய நாயை சமைத்துச் சாப்பிடுவது என முடிவெடுத்தார் முதலாளி.
அதன்படி, அந்தநாயை வெட்டிச் சமைத்து குடும்பத்தார் அனைவரும் சாப்பிட்டுள்ளனர். மீதமிருந்த சாப்பாடை தனது அக்கம்பக்கத்தாருக்கும் கொடுத்துள்ளார்.
நாயின் உடலில் ஏறியிருந்த விஷம் மாமிசத்திலும் கலந்திருந்ததால் அந்தக் கறியை சாப்பிட்டவர்கள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர், அவரது 2 குழந்தைகள் மற்றும் அருகாமையில் வசிக்கும் மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
நாய்க் கறியைச் சாப்பிட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.