அமெரிக்காவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: 5 பேர் பலி
டென்வர்: அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தில் உள்ள எரீ நகரில் இருக்கும் எரீ முனிசிபால் விமான நிலையத்தில் இருந்து பைப்பர் பிஏ-46 என்ற சிறய ரக விமானம் 5 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் டென்வர் நகர் அருகே செல்கையில் விபத்துக்குள்ளானது. விமானம் ஒன்று திடீர் என்று தரையில் வந்து விழுவதை அந்த வழியாகச் சென்ற கார் டிரைவர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். விமானத்தில் இருந்த மற்ற 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விமானம் விழுந்தபோது சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.