பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்: தீவிரவாதிகள் 5 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் வடக்கு வாஜிரிஸ்தான் மாகாணத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா, பாகிஸ்தான் ராணுவம் இணைந்து செயல்படுகிறது. இந்நிலையில் வாஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 5 தீவிரவாதிகள் பலியாகினர் என்று பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாட்டா கேல் பகுதியில் உள்ள வீடு மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியது. இந்த தாக்குதலில் மேலும், 2 தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் அந்த நாட்டு அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா தனது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.
கராச்சி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடந்து தீவிரவாதிகளை ஒழிக்க ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.