ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல்! 6 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் ராணுவம் தனது ராணுவ தளத்தை அமைத்திருந்தது. நேற்று அதிகாலை இந்த தளத்தின் மீது, திடீரென பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதாவது, வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது மோதி வெடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதேபோல 2 வீரர்கள், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில்தான் பாகிஸ்தானில் அரசியல் சலசலப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இப்படி இருக்கையில், திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று காலை ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படை அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டம் மற்றும் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் சில பகுதிகள் மீது பாக். போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இந்த தாக்குதலில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்றும், 3 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தாக்குதலை ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்திருக்கிறது. எங்கள் நாட்டு எல்லையில் பொறுப்பற்ற தாக்குதல் நடந்திருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும்,
"கடந்த 20 ஆண்டுகளாக சில மோசமான அரசியல் சார்புள்ள ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான்-ஆப்கான் என இரு நாடுகளுக்கு இடையே பெரிய மோதலை தூண்டிவிட முயன்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு நிச்சயம் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே, இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையை பாகிஸ்தான் ராணுவம் கைவிட வேண்டும்" என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் பாகிஸ்தான், தனது அண்டை நாடுகளுடன் பல்வேறு முரண்களை எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications