அநியாயமாக பறிபோன 60 பச்சிளம் உயிர்கள்.. அதிகார வெறியால் சூடானில் கொடுமை
சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. அடுத்து யார் ஆட்சியாளர்களாக மாறப்போகிறார்கள் என்கிற போட்டியில் இரு தரப்பினரும் அவ்வப்போது சிறு சிறு மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த மோதல் போக்கானது தற்போது தீவிரமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்கிரமடைந்த இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். போரினால் பொதுமக்கள் உணவு, நீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், கார்ட்டூமில் உள்ள அல்-மய்கோமா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் அருகே சமீபத்தில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிக்கு வந்து சேர வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏதும் வரவில்லை.

எனவே பசியை தாங்காமலும், காயமடைந்த குழந்தைகள் முறையாக சிகிச்சை பெறாமலும் இறக்க தொடங்கின. கடந்த வாரத்தில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இப்படியாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக குழந்தைகள் காப்பகத்தின் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனைகள், உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் இடம், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் இருக்கும் இடம் என எல்லா இடங்களிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த வாரம் இந்த குழந்தைகள் காப்பகத்திற்கு அருகே திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் காப்பகத்தின் வளாகம் முழுவதும் தூசியும், புகையும் சூழ்ந்தன. குழந்தைகளும் நாங்களும் கடுமையான மூச்சுத்திணறலுக்கு உள்ளானோம்.
இது வெறும் தொடக்கமாகத்தான் இருந்தது. பொதுவாக தாக்குதல் நடத்தப்படும் பகுதிகளுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்யமாட்டார்கள். அதேபோல நாங்கள் அனைவரும் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் இன்றி தவித்தோம். இந்த கொடூர நிலைமை மூன்று வாரங்களுக்கும் மேல் எங்களுக்கு நீடித்தது. எனவே குழந்தைகள் ஒவ்வொருவராக உயிரிழக்க தொடங்கினர். மூன்று மாத குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க தொடங்கின.
எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. வெளியில் சென்றால் தாக்குதல் நடத்துவார்கள். அதையும் சமாளித்து சென்றாலும், உணவு பல கி.மீகளுக்கு அப்பால் இருக்கும். அதுவரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்று திரும்ப முடியாது. எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 குழந்தைகள் வரை உயிரிழிக்க தொடங்கினர். இந்த செய்தி சில தொண்டு நிறுவனங்களுக்கு தெரிந்தது. இதனையடுத்து அவர்கள் ஐநாவின் உதவியை நாடினார்கள். இப்படியாகதான் எங்களுக்கு உதவி கிடைத்தது" என்று கூறியுள்ளார்.
சூடான் முழுவதும் தற்போது வரை சுமார் 341 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதேபோல, 860க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இது ஓர் தோராயமான எண்ணிக்கை என்றுதான் சொல்லப்படுகிறது. உள்ளாட்டு போர் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வெவ்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications