தென் ஆப்பிரிக்காவில் துயரம்.. 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. அலறிய மக்கள்.. 63 பேர் பலியான சோகம்
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 63 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார முனையமாக விளங்கும் இடம் ஜோகன்னஸ்பர்க். கடந்த வாரம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு கூட ஜோகன்னஸ்பர்க்கில் தான் நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் மாநாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்று இருந்தார். தென் ஆப்பிரிக்க நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதுகெலும்பாக இந்த நகரம் உள்ளது.

மேலும் இந்த நகரம் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் கொண்டதாகும். எப்போதும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பாகவும் காணப்படும் இந்த நகரத்தில் உள்ள ஒரு ஐந்து மாடிக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து சில நிமிடங்களில் மளமளவென கட்டிடம் முழுவதுமாக பரவியது. கரும்புகையும் வெளியேறியது.

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் மக்கள் அலறினர். இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி சுமார் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிலர் புகையை சுவாசித்ததால் கடுமையான உடல் நலபாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தை சுற்றிலும் தீ அணைப்பு வாகனங்கள் சூழ்ந்துள்ளன. தீ அணைப்பு வீர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications