சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டரில் 7.5 அலகுகளாக பதிவு - சுனாமி வார்னிங் வாபஸ்!
சாலமன்: ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.5 ரிக்டராக பதிவாகி பிறகு படிப்படியாக குறைந்தது. இறுதியாக ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது.
இந்த மிதமான நிலநடுக்கமானது சாலமன் தீவுகளில் இருந்து 78 கிலோ மீட்டர் தொலைவில் லட்டா என்ற இடத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், பசிபிக் கடலில் சாண்டா குரூஸ் தீவுகளுக்கு அருகில் கடலுக்கு அடியில் 33 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் அங்கு 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருந்ததாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
சாலமோன் தீவுகள், வனாது, நௌரு, பாபுவா நியூ கினியா, பிஜி, வேல்ஸ் மற்றும் ஃப்யூடுனா, கிரிபாடி தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் தென் பசிபிக் கடலோரம் உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
எனினும், ஹவாய் சுனாமி எச்சரிக்கை மையமோ, சுனாமி வர வாய்ப்பில்லை என்று அறிவித்தது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அலைகளில் சில மணி நேரங்களுக்கு வேகமிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு சாலமோன் தீவுகளில் 8.1 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்பட்டது. இதில் 52 பேர் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
13 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து போயின என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் 90 சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படும் "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் சாலமன் தீவுகள் அமைந்திருப்பதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகின்றது.