ஆஸ்கர்.... ஒரே ஒரு விருது.. லைன் கட்டி போட்டியில் நிற்கும் 81 நாடுகள்
லாஸ் ஏஞ்சலெஸ்: 88வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில் ஒரே ஒரு விருதுக்கு 81 நாடுகளின் திரைப்படங்கள் போட்டியில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதுக்குத்தான் இப்படி குழாயடிக் கூட்டம் போல படங்கள் அணிவகுத்து நிற்கின்றனவாம்.

இந்த நீண்ட வரிசையில் இந்தியாவின் சார்பில் போயுள்ள கோர்ட் என்ற படமும் அடக்கம். மராத்தியில் வெளியான இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சைதன்யா தமானே.
கடந்த ஆண்டு 79 படங்கள் கலந்து கொண்டிருந்தன. இந்த ஆண்டு 2 படம் கூடுதலாகி 81 ஆக உயர்ந்துள்ளது. இதில் பராகுவே நாடு முதல் முறையாக தனது படத்தை அனுப்பி வைத்துள்ளது.
இந்தியா தவிர வங்கதேசத்திலிருந்து ஜலால்ஸ் ஸ்டோரி என்ற படமும், நேபாளத்திலிருந்து தலாக்ஜங் வெர்சஸ் துல்கே என்ற படமும், பாகிஸ்தானிலிருந்து மூர் என்ற படமும் விருதுக்கு வந்துள்ளன.
அர்ஜென்டினாவின் தி கிளான், ஆஸ்திரியாவின் குட்நைட் மம்மி, பிரேசிலின் தி செகன்ட் மதர், கொலம்பியாவின் எம்பிரேஸ் தி செர்பன்ட், ஜெர்மனியின் லேபிரையந்த் ஆப் லைஸ், ஹங்கேரியின் சன் ஆப் சால், ஐஸ்லாந்தின் ராம்ஸ், ஸ்வீடனின் ஏ பீஜியன் சாட் ஆன் ஏ பிரான்ச் ரெப்ளக்டிங் ஆன் எக்ஸிஸ்டன்ஸ் ஆகிய படங்கள்தான் கடும் போட்டியில் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றுதான் விருது பெறும் என்கிறார்கள்.
இந்த வருட போட்டியில் கலந்து கொண்டுள்ள இயக்குநர்களில் 16 பேர் பெண்கள் ஆவர்.
தற்போது வந்துள்ள 81 படங்களிலிருந்து முதல் கட்டமாக 9 படங்களை தேர்வு செய்வார்கள். பிறகு அதிலும் வடி கட்டி 5 படங்களைத் தேர்வு செய்து இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைப்பார்கள்.
அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி நாமினேஷன்கள் அறிவிக்கப்படும். பிப்ரவரி 28ம் தேதி விருதுகள் விழா கோலாகலமாக நடைபெறும். ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெறும். இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.












Click it and Unblock the Notifications