வெளிநாடுகளில் இறக்கும் இந்திய தொழிலாளர்களின் உடலை மத்திய அரசே தாயகம் கொண்டு வர கோரிக்கை!
துபாய்: இந்திய தொழிலாளர்கள் வெளிநாடுகளில் உயிர் இழந்தால் அவர்களின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை வலியுறுத்தியுள்ளது.
ஏழை இந்திய தொழிலாளர்கள் வெளிநாட்டில் உயிரிழந்தால் அவர்களின் உடலை தாயகத்திற்கு எடுத்து வரும் செலவை ஈடு செய்ய முடியாத நிலையில் அவர்களின் குடும்பத்தினர் உள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இறக்கும் ஏழை இந்திய தொழிலாளர்களின் உடல்கள் அந்தந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் முகத்தை இந்தியாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் காண முடியாத பரிதாப சூழல் ஏற்படுகிறது.

எனவே மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் இறந்தவரின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டிய செலவை ஏற்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்களில் ஒருவரும், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக துபாய் வந்த அப்துல் ரஹ்மான் யு.ஏ.இ. காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான் உள்ளிட்டோரோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் இ.அஹமது சாஹிப் எம்.பி.யைச் சந்தித்து பேசினர்
அதன் பிறகு அவர் அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

வெளிநாட்டிலிருந்து உடலை மத்திய அரசே எடுத்து வருவது கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலவாணியை நம் நாட்டிற்கு ஈட்டி தரும் வெளிநாடுகளில் உழைத்து தேய்ந்து உயிரையும் இழக்கும் அந்த தொழிலாளருக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை. ஏற்கனவே ஏர் இந்தியா விமானம் மூலம் கொண்டு வரலாம் என பேசப்பட்டதை செயல்படுத்த வேண்டும். மேலும் இதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய சமூக நல அமைப்புகள் மத்திய அரசிடம் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுக்க வேண்டும். எங்கள் கட்சியின் சார்பில் இதற்கு தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.
பேட்டியின் போது அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications