பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை என்பது விடுக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸ்.. பசிபிக் பெருங்கடலின் ‛ரிங் ஆஃப் ஃபயர்' எனும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இதற்கு அந்த நாடு அமைந்துள்ள இடம் தான் முக்கிய காரணம். இருப்பினும் பல நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து காணப்படுவதால் அந்த நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவது இல்லை.
இந்நிலையில் தான் இன்று காலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் நேரப்படி காலை 10.13 மணிக்கு (நம் நாட்டில் காலை 6.13மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் என்பது ஜெர்மன் நிலஅதிர்வு ஆராய்ச்சி மையத்தில் பதிவாகி உள்ளது. அதாவது ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் என்பது மின்டானோ தீவின் தெற்கு கடற்கரையில் உள்ள வடகிழக்கு செலிப்ஸ் கடலில் பூமிக்கடியில் 620 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல் கடலுக்கு நடுவே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும் திடீரென்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸ் அரசு உஷாராகி உள்ளது.












Click it and Unblock the Notifications