அழுக்கு சாக்ஸை ஆசையாய் நுகர்ந்து பார்த்த இளைஞர்.. மருத்துவமனையில் அனுமதி!
அழுக்கு சாக்ஸை நுகர்ந்து பார்த்ததால் இளைஞர் ஒருவர் கடும் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்.
பெய்ஜிங்: சீனாவில் அழுக்கு சாக்ஸை நுகர்ந்து பார்த்ததால் நுரையீரல் தொற்றுநோய்க்கு ஆளாகி அவதிப்பட்டு வருகிறார் இளைஞர் ஒருவர்.
பள்ளிகள் மற்றும் சில அலுவலகங்களில் ஷூ அணிந்து தான் வரவேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், ஷூவின் பளபளப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெரும்பாலானவர்கள், அதன் உள்ளே அணியும் சாக்ஸிற்கு தருவதில்லை.

ஒரு நாளில் ஏறக்குறைய எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நம் பாதத்தோடு இணைந்திருக்கும் சாக்ஸ் தூய்மையானதாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில்லை. அதோடு அந்த அழுக்கு சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இதனால் தங்கள் உடலுக்கு மட்டுமல்ல, தங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு என்பதை அவர்கள் உணர்வதில்லை.
இப்படியாக மேற்கூறிய அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நிச்சயம் உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சீன இளைஞருக்கு நேர்ந்த கதி தான் உங்களுக்கும்.
சீனாவின் பியூஜியான் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் சமீபத்தில் உடல்நலப் பாதிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எப்படி அந்த இளைஞருக்கு அத்தகைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவர்கள் விசாரித்தனர். அதில், நோய்க்கான காரணம் அவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
காரணம், அந்த இளைஞருக்கு, தான் தினமும் பயன்படுத்திய அழுக்கு சாக்ஸை நுகர்ந்து பார்க்கும் வினோத பழக்கம் இருந்துள்ளது. அந்த பழக்கத்தின் காரணமாகவே நுரையீரலில் வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். அழுக்கு சாக்ஸ் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பேருந்தில் அழுக்கு சாக்ஸ் போட்டுக்கொண்டு பயணம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications