எங்களுக்கு நாய் குட்டிதான் முக்கியம்.. தவறாக ஏறிய நாயால் விமானத்தை வழிமாற்றிய விமானிகள்
அமெரிக்காவில் யுனைட்டட் விமானம் ஒன்றில் பயணம் செய்த நாய் குட்டியால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் யுனைட்டட் விமானம் ஒன்றில் பயணம் செய்த நாய் குட்டியால் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அந்த நாய் குட்டி செல்ல வேண்டிய விமானத்திற்கு பதிலாக வேறு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தெரிந்ததும் அந்த விமானத்தை ஒட்டிய விமானிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துள்ளார்கள். கடைசியில் அந்த நாய் குட்டி செல்ல வேண்டிய விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பி இருக்கிறார்கள்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் நாய் குட்டி ஒன்றிற்காக விமானத்தை ஏன் திசை திருப்பினோம் என்று அந்நிறுவனம் காரணம் சொல்லி இருக்கிறது.
வேறு விமானத்தில் ஏற்றப்பட்டது
நியூ ஜெர்சியில் இருந்து ஒஹாயோ செல்ல வேண்டிய விமானத்தில் அந்த நாய் குட்டி பயணிக்க வேண்டியது. ஆனால் கடைசியில் தவறுதலாக செயின்ட் லூயிஸ் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டது. இது பாதி தூரம் சென்ற பின் மட்டுமே விமான நிறுவனத்திற்கு தெரிந்துள்ளது.
விமானத்தை திருப்பினார்கள்
இந்த விஷயம் தெரிந்தவுடன் யுனைட்டட் நிறுவனம் உடனே விமானத்தை ஒஹாயோ நோக்கி திருப்ப சொல்லி இருக்கிறது. பயணிகளை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டு உடனே விமானத்தை வழி மாற்றிவிட்டது. இதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தும் விமானிகள் கேட்கவில்லை.
கொண்டு சேர்க்கப்பட்டது
சரியாக 6 மணி நேரத்திற்கு பின் அந்த நாய் குட்டி அதன் உரிமையாளர்களிடம் சேர்க்கப்பட்டது. மேலும் அதில் இருந்த பயணிகள் அனைவருக்கும் வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு செயின்ட் லூயிஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
காரணம்
சில நாட்களுக்கு முன்பு யுனைட்டட் விமானத்தில் நாய் ஒன்று மரணம் அடைந்தது. அதே வாரம் இன்னொரு நாய் ஒன்று வேறு விமானத்தில் மாற்றி ஏற்றப்பட்டது. இந்த இரண்டு விவகாரமும் பெரிய பிரச்சனை ஆனதை அடுத்து தற்போது நாய் ஒன்றிற்காக விமானத்தை திசை திருப்பி இருக்கிறார்கள்.