ரசிகைகளுடன் சேர்ந்து செல்பிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகர் கைது... சவுதியில்!
ரியாத்: பொது இடத்தில் ரசிகைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டதற்காக குவைத்தைச் சேர்ந்த பிரபல நடிகரை சவுதி அரேபிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
குவைத்தில் பிரபல நடிகராக இருப்பவர் அப்துல் அஜிஸ் அல் கஸ்ஸார். சம்பவத்தன்று இவர் ரியாத் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது ரசிகைகள் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதைக் கண்ட அங்கிருந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், அப்துலை பிடித்து ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே இழுத்துச் சென்றார். அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சவுதி நாட்டு சட்டங்களின்படி, பொது இடங்களில் பெண்களுடன் பழகுவதும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனால், அப்துலை ஒரு காரில் ஏற்றி ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக, வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பெண்களுக்கு நடுவில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் அப்துலை, வெள்ளை அங்கி அணிந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையகத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் இழுத்துச் செல்வது போல் காட்சிகள் அமைந்துள்ளன.