ஆப்கான்: குர்ஆனை எரித்ததாக கூறி பெண்ணை எரித்துக் கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை
காபூல்: ஆப்கானிஸ்தானில் குர்ஆனை எரித்ததாகக் கூறி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரைச் சேர்ந்தவர் ஃபர்குந்தா(27). அவர் குர்ஆனின் சில பக்கங்களை எரித்ததாகக் கூறி கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி ஒரு கும்பல் அவரை தாக்கி, காயப்படுத்தி, தீ வைத்து எரித்தது. அப்படியும் ஆத்திரம் அடங்காத அந்த ஆண் கும்பல் ஃபர்குந்தாவின் எரியும் உடலை காபுல் பாலத்தில் இருந்து தூக்கி வீசியது. இதை சிலர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் 49 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பவத்தை வேடிக்கை பார்த்த 19 போலீசார் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும் 8 பேருக்கு தலா 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஃபர்குந்தாவின் தந்தை நாதிர் கூறுகையில்,
என் மகள் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தார். அவர் எப்படி குர்ஆனின் பக்கங்களை எரித்திருப்பார். ஷா இ தோ ஷம்சேரா மசூதியில் உள்ள முல்லா மக்களுக்கு போலி மந்தரித்த கயிறுகளை அளிப்பதாக என் மகள் தெரிவித்தார்.
இதனால் என் மகள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி கொன்றுவிட்டனர் என்றார்.